அமரீந்தருடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் இன்று சந்திப்பு
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜீத் சிங் சன்னி முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதையும் படிக்க | பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜீத் சிங் சன்னி
இதையடுத்து, காங்கிரஸின் மேலிட உத்தரவையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பதவியேற்பு நிகழ்வுக்கு பின், அமரீந்தர் சிங்கை நேரில் சந்தித்து புதிய முதல்வர் சரண்ஜீத் வாழ்த்து பெறவுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.