பஞ்சாப், சத்தீஸ்கர், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து மற்ற கட்சிகளில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் காங்கிரஸ் மேலிடத்தை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காந்தி குடும்பத்தை பெயர் குறிக்காமல் விமரிசித்த அவர், "காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா எனக் கூறி கீழ்படிபவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம்.
தலைவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? ஒருவேளை அது நம் தவறா என்று நாம் ஆராய வேண்டும்? உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவை கூட்ட வேண்டும். தலைவர்களிடையே குறைந்தபட்சம் ஒரு உரையாடல் நடைபெற வேண்டும். நாங்கள் கட்சியின் சித்தாந்தத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம்.
காங்கிரஸின் முரண்பாடு என்னவென்றால், தலைமைக்கு நெருக்கமானவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால், தலைமையிடம் நெருக்கமாக இல்லாதவர்களாக கருதப்படுபவர்கள் கட்சியில் இன்னும் உள்ளார்கள்" என்றார்.
இதையும் படிக்க | பஞ்சாபில் தொடரும் குழப்பம்: இன்று கூடுகிறது அமைச்சரவை
கடந்தாண்டு, காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள், கட்சியில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இவர்களே, ஜி-23 என்றழைக்கப்படுகின்றனர்.