பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதவியிலிருந்து தொடர்ந்து மூத்த தலைவர்கள் ராஜிநாமா செய்து வரும் நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். அவருக்கு ஆதரவாக மாநிலப் பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ரா, மாநிலப் பொருளாளர், இரண்டு நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் ரசியா சுல்தானா என வரிசையாக அனைவரும் ராஜிநாமா செய்து வருவதால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இவர்களின் ராஜிநாமாவை கட்சியின் தலைமை இன்னும் ஏற்கவில்லை எனவும், விரைவில் பிரச்னைகள் பேசித் தீர்க்கப்படும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், மாநில அமைச்சரவை மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கு முதல்வர் சரண்ஜீத் சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.