தில்லி ஜஹாங்கீர்புரி வழக்கு தொடர்பாக இதுவரை மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
தில்லியிலுள்ள ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. காவல் துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
தில்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா இதுபற்றி கூறியதாவது:
"இதுவரை மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு தடயவியல் ஆய்வு செய்யப்படும்.
ஜஹாங்கீர்புரியில் பாதுகாப்பு உணர்வை வரவழைப்பதற்காகக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சூழல் சரியானவுடன் படைகள் குறைக்கப்படும்.
சமூக ஊடகங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தவறானத் தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தடயவியல் துறையின் நான்கு குழுக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இந்த வழக்கை காவல் துறையின் 14 குழுக்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் தொடக்க நிலைதான் இது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார் அவர்.