வாணியம்பாடியில் நூதன முறையில் கடத்த பாலாற்றில் குவியல் குவியலாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 யூனிட் மணல் மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் நூதன முறையில் இரு சக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தும் மர்ம நபர்கள் சுமார் 5 யூனிட் அளவு கொண்ட மணல்களை பகல் நேரத்தில் பாலாற்றில் இருந்து கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக கட்டி பாலாற்றில் ஆங்காங்கே குவியல் குவியலாக அடுக்கி இரவு நேரத்தில் கடத்த தயாராக வைத்திருந்தனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
இது குறித்து தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. தகவல் அறிந்த வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து டிப்பர் லாரி மூலம் எடுத்துச் சென்று வெள்ள தடுப்புப் பணிக்காக ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.