நேஷனல் ஹெரால்டு வழக்கு: யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை சீல் வைத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்
நேஷனல் ஹெரால்டு வழக்கு: யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்
Published on
Updated on
2 min read


நேஷனல் ஹெரால்டு வழக்கில், ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை சீல் வைத்துள்ளது.

சீல் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக வாயிலில், அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், அமலாக்கத் துறையின் முன் அனுமதியின்றி, இந்த அலுவலகத்தை யாரும் திறக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அன்புச்செழியன் மகளின் பிரமாண்ட திருமணம்.. பிகில் பட விவகாரம்.. பரபரப்பைக் கூட்டும் வருமான வரிச் சோதனை

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று யங் இந்தியா நிறுவன அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனா்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மத்திய தில்லியில் பகதூா் ஷா ஜஃபா் மாா்கில் அமைந்துள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக அண்மையில் பல்வேறு நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்றாா்.

வழக்கில் அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சோதனை நடத்தப்பட்டு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பவன்குமாா் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில், ராகுல் காந்தியிடம் அண்மையில் தொடா் விசாரணை நடத்தினா். அவரிடம் 5 நாள்களில் 50 மணி நேரத்துக்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தொடா்ந்து, சோனியா காந்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவரிடம் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களில் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா். அப்போது அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com