பிகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்கும் நிதீஷ்: அறிய வேண்டிய 10 தகவல்கள்

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் புதிய கூட்டணியின் ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்கிறார் நிதீஷ் குமார்.  
பிகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்கும் நிதீஷ்
பிகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்கும் நிதீஷ்
Published on
Updated on
2 min read


ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் புதிய கூட்டணியின் ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக இன்று பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்கிறார் நிதீஷ் குமார்.  

பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவெடுத்த நிதீஷ் குமார் நேற்று ஆளுநரை இரண்டு முறை சந்தித்தார். முதல் முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

ஏழு கட்சிகளைச் சேர்ந்த, 164 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கிருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, புதன்கிழமை ஆட்சியமைக்குமாறு நிதீஷ் குமாரை ஆளுநர் அழைத்தார்.

இதையடுத்து, நேரடியாக முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் இல்லத்துக்குச் சென்று புதிய அரசமைப்பது குறித்து ராப்ரி தேவியின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தினார். 

பிகாரில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள் இவை..

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து ஜேடியு தலைவர் ஒருவர் கூறுகையில், எங்களது தலைவர் நிதீஷ் குமார், பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' சதிதிட்டத்தை மொட்டாக இருக்கும்போதே தெரிந்து கொண்டார். முதல்வரின் இந்த திறமைதான், ஜேடியுவை இரண்டாகப் பிரித்து பிகாரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் எண்ணத்தை நிறைவேற விடாமல் செய்துள்ளது என்கிறார்.

இந்த பிளவு குறித்து பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வைத்த உறுதி மொழிகளை நிதீஷ் குமார் மறந்துவிட்டர். இதற்காக அவரை பிகார் மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நிதீஷ் குமார் எடுத்த நடவடிக்கைக்கு மிக எதிரானதான நேற்றைய நிகழ்வு உள்ளது. அப்போது, மஹாகத்பந்தன் என்ற கூட்டணியிலிருந்து வெளியேறி தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைத்திருந்தார்.

அதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, நிதீஷ் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகினார். 

கடந்த 9 ஆண்டுகளில் அவர் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.

பிகார் சட்டப்பேரவையின் ஒட்டுமொத்த பலம் 243 எம்எல்ஏக்கள். தற்போது புதிய கூட்டணிக்கு 164 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.

சட்டப்பேரவையில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம்தான் அதிகபட்சமாக 79 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. பாஜகவுக்கு 77ம், ஜேடியு 44 எம்எல்ஏக்களையும் பெற்றுள்ளன.

தற்போது பிகாரில் நடைபெற்றிருக்கும் அரசியல் மாற்றம், அடுத்த மக்களவைத் தேர்தலின்போது வெகுவாக எதிரொலிக்கும். 

இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த திபங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அண்மையில் பேசுகையில், மாநிலக் கட்சிகளுக்கு எதிர்காலமே இல்லை என்று கூறியிருந்தது, அவர்களது கட்சியின் பார்வையைக் காட்டுவதாகவே உள்ளது என்றார்.

தனது அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் பாஜக அழித்துவிட்டது என்பதை வரலாறு காட்டுவதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com