பிராமணரல்லாதவர்களும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தைத் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை பிரசாதங்களைத் தயாரிக்க மலையாள பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விளம்பரத்தை எதிர்த்து, புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சபரிமலை பிரசாதங்களைத் தயாரிக்க மலையாள பிராமணர்களுக்கு மட்டுமே டெண்டர் விடப்படும் என்ற நிபந்தனையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் திரும்பப் பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்களைத் தயாரிக்க விளம்பரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மலையாள பிராமணர்கள் மட்டுமே பிரசாதங்கள் தயாரிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து, மனித உரிமைகள் ஆணையத்திற்கும், மாநில அரசுக்கும் அம்பேத்கர் கலாசார பேரவை தலைவர் சிவன் புகார் அளித்தார்.
அதில், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நிர்வாகம், சமூக நீதிக்கு எதிராக குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே வாய்ப்புகளை வழங்கும் வகையில் உள்ளது என புகார் எழுப்பப்பட்டது.
இதன் எதிரொலியாக ஐயப்பன் கோவில் பிரசாதங்கள் தயாரிக்க விதிக்கப்பட்டிருந்த சாதிய நிபந்தனையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் திரும்பப் பெற்றுள்ளது. இனி இந்த நிபந்தனை பின்பற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.