ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு வீரர் பலியானார்.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே 2 காவலர்களுடன் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 37 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற வீரர்கள் படுகாயமுற்ற நிலையில் ஸ்கிம்ஸ்(SKIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு வீரர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை பணிகளை முடித்து திரும்பும்போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் பிரேக் பிடிக்காத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.