தில்லியில் கட்டடங்களை இடிப்பதற்குத் தடை! காரணம்?
புதுதில்லி: அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக தில்லியில் கட்டுமான பணி மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
காற்றின் தர மேலாண்மை ஆணையமானது தலைநகரான தில்லியில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளை 'கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன்' திட்டத்தின் கீழ் தடை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் இன்று மாலை 4 மணியளவில் சராசரி காற்றின் தரமானது, அதன் குறியீட்டு எண்ணான 407-ஆக இருந்தது.
காற்று தர மேலாண்மை ஆணையமானது தெரிவிக்கையில், காற்றின் தறம் 201 மற்றும் 300 க்கு இடைப்பட்ட அளவில் இருந்தால் அது 'மோசம்' எனவும், அதுவே 301 மற்றும் 400-ஆக இருந்தால் மிகவும் மோசமானது என்றும் அதே வேளையில் காற்றின் தரம் 401 - 500 என்றால், அது மிகவும் கடுமையானது என தெரிவித்துள்ளது.
நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் மாசு அளவு 'கடுமையான' வளையத்துக்குள் நுழைந்ததால், காற்று தர மேலாண்மை ஆணையம் தில்லியில் உள்ள அனைத்து அத்தியாவசியத் திட்டங்களைத் தவிர மற்ற கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
அதே வேளையில், காற்று தர மேலாண்மை ஆணையமானது நவம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் காற்றின் மாசு மூன்றாம் நிலை கீழ் சென்றதால் 'கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன்' திட்டத்தின் கீழ் கட்டுமான நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது.
இருப்பினும், கடந்த சில நாள்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தத் தடை தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.