இணைய வழியில் ஆசிட் (அமிலம்) விற்பனை செய்வது குறித்து ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசியவர்கள், ஆன்லைனில் அதனை வாங்கியுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தில்லியின் துவர்கா பகுதியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த 17 வயது பள்ளி மாணவி மீது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஆசிட் வீசியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
பள்ளி மாணவி மீது திட்டமிட்டு ஆசிட் வீசியது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படும் 20 வயது சச்சின் அரோரா முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக அவரின் நண்பர்கள், ஹர்ஷித் அகர்வால் (19), விரேந்தர் சிங் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் அமிலத்தை வாங்கியுள்ளனர். மாணவர்களின் செயலுக்கு தில்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், காய்கறிகளைப் போல அமிலமும் எளிதாக இணையதளத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அமில (ஆசிட்) விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும், ஆன்லைனில் எளிதில் கிடைப்பதற்கு எதிராக ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.