ஆந்திரம் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், தெலுங்கு தேசம் தொண்டர்களின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
பல்நாடு மாவட்டம் மச்சர்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த பேரணியின் போது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய வன்முறையில் முடிந்தது. அப்பகுதியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் மற்றும் அதன் உள்ளூர் தலைவர்களின் வாகனங்கள் கல் வீச்சு மற்றும் தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டன.
மோதலைத் தொடர்ந்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இரண்டு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பல்நாடு மாவட்டத்தின் மார்ச்சர்லா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், குற்றவாளிகள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் மார்ச்சர்லா நகரில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சனிக்கிழமை அதிகாலை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு கண்டனம்: இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், “மச்சர்லாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நடத்திய தாக்குதல்கள், தீ வைத்த சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியினரின் ரௌடித்தனத்திற்கு காவல்துறை துணைபோவது இன்னும் மோசமான செயல் என தெரிவித்துள்ளார்.