புது தில்லி: பயங்கரவாதத்தை மோடி அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.
தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோட் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 2014 முதல் 168 சதவீதம் பயங்கரவாதம் குறைந்துள்ளது.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், இல்லையெனில் அவர்களே அதன் விளைவை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு தண்டனை விகிதம் 94 சதவீதம் என்று கூறியவர், சமூக நலன் என்ற சாக்குப்போக்கில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பை தடை செய்ய மோடி அரசாங்கம் தயங்கவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று தாக்கூர் கூறினார்.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கில் அமைதியின் சகாப்தம் தொடங்கியதாகவும், வன்முறைகள் 80 சதவீதம், பொதுமக்கள் இறப்பு 89 சதவீதம் குறைந்துள்ளது, 2014க்கு பின்னர் 6,000 தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் முக்கியமானதாகக் கருதும் மோடி அரசு, கங்கா நடவடிக்கையின் கீழ் ரஷியா-உக்ரைன் போரின்போது 22,500-க்கும் மேற்பட்டோரை மீட்டது என்றும், 2021 ஆம் ஆண்டு ஆபரேஷன் தேவி சக்தி நடவடிக்கையின் கீழ் சுமார் 670 இந்திய குடிமக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தாக்கூர் கூறினார்.