ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணத்தில்(பாரத் ஜோடோ) கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணியவும் சானிடைசர் பயன்படுத்தவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியதுடன் இந்த கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் மக்களின் நலன் கருதி ராகுல் காந்தி இந்த ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஜோ பைடனை இன்று சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி!