ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான ஓவைசியின் கார் மீது நேற்று துப்பாக்குச்சூடு நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இசட் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மீரட்டில் பிரசாரம் மேற்கொண்ட பின்னர், தில்லிக்கு திரும்பியபோது அவரின் வாகனம் மீது துப்பாக்குச்சூடு நடத்தப்பட்டது.
இதையடுத்து, அவரின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் இசட் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. மீரட்டில் கித்தூத் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்குச்சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் சச்சின் என்றும் நோய்டாவை சேர்ந்த அவரின் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படிப்பை முடித்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், அதை காவல்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்து வலதுசாரி அமைப்பின் உறுப்பினராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிக்க | பஞ்சாப் முதல்வரின் உறவினர் பூபிந்தா் சிங் கைது!
குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரின் பெயர் சுபம் என்பதும் அவர் சஹாரன்பூரை சேர்ந்த விவசாயி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது, ஓவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பரூதின் ஓவைசி ஆகியோரின் கருத்து தங்களை கோபப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
சமீபத்தில் வாங்கியுள்ள நாட்டு துப்பாக்கிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதை விற்றவர்களை தேடிவருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை காவலில் எடுக்க காவல்துறையினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.