பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபிந்தா் சிங்கை அமலாக்கத்துறை நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணக்கில் வராத 10 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பூபிந்தா் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று ஜலந்தரில் உள்ள அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு பூபிந்தா் சிங் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்பின்னர், பூபிந்தா் சிங்கை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று மொஹாலி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.