லதா மங்கேஷ்கர் மறைவு; மகாராஷ்டிரத்தில் நாளை பொது விடுமுறை

அவரின் மறைவையொட்டி, மகாராஷ்டிரத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்குவங்கத்தில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
லதா மங்கேஷ்கர் (கோப்புப்படம்)
லதா மங்கேஷ்கர் (கோப்புப்படம்)

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் (92) கடந்த ஜனவரி 8-ம் தேதி மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் மீண்டும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடனே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

இந்த நிலையில், அவர் இன்று காலை காலமானார். அவரின் மறைவையொட்டி, மகாராஷ்டிரத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்குவங்கத்தில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 7, 2022 திங்கட்கிழமை அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கர் 13 வயதில் பாடல்கள் பாடத் தொடங்கினார். 1942-இல் முதல் பாடலைப் பதிவு செய்தார். பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் 1969-இல் பத்ம பூஷண், 1999-இல் பத்ம விபூஷண், 2001-இல் பாரத் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவர் பெற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com