வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. ஜனவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் குறைந்திருந்தாலும் தொழிலாளர் சந்தையிலிருந்து 66 லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளியேறியுள்ளது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
பணியில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான கணக்கெடுப்பு அவர்களுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு அளித்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உள்ள ஊழியர்கள் ஊதிய உயர்வை பெறுவார்கள் என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில், 9.9 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என நாடு முழுவதும் உள்ள தொழில்துறை அமைப்புகள் தெரிவித்ததாக உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனமான ஆன் ஹ்யூமன் கேபிட்டல் சொல்யூஷன் குறிப்பிட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிகபட்ச ஊதிய உயர்வை பெறும் நாடாக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது
சீனாவில் உள்ள ஊழியர்கள் 6 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என்றும் ரஷியாவில் இது 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. பிரேசிலில் ஊதிய உயர்வு 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
40 தொழில்துறைகளில் 1,500 நிறுவனங்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், இணையதள வர்த்தகம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் நிதி நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் அல்லது தகவல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயங்கும் சேவை நிறுவனங்கள், வாழ்க்கை அறிவியல் நிறுவனங்களில் பணிபுரிவோர் அதிகபட்ச ஊதிய உயர்வை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, நிறுவனங்களிலிருந்து அடிக்கடி ராஜிநாமா செய்வோரின் விகிதம் 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 21 சதவிகிதமாக பதிவாகியுள்ளது என கண்கெடுப்பில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆன் ஹ்யூமன் கேபிட்டல் சொல்யூஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் நிதின் சேதி கூறுகையில், "கொந்தளிப்பான காலகட்டத்திற்கு மத்தியில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வரவேற்கத்தக்க ஒன்று. திறமைக்கான செலவு அதிகரித்து வருவதும் நிறுவனங்களில் அடிக்கடி ராஜிநாமா செய்வோரின் விகிதம் உச்சம் தொட்டிருப்பதை இணைத்து பார்த்தால் ஊதிய ஊயர்வை இரட்டை குழல் துப்பாக்கியாக பார்க்க வேண்டும்.
கடினமான சூழலிலிருந்து மீண்டெழும் பணியாளர்களை கட்டமைக்கும் வகையில் புதிய திறன்களில் முதலீடு செய்ய வேண்டிய தேவை மற்றும் பொருளாதார மீண்டெழுந்ததன் காரணமாக இந்த போக்கு தூண்டப்பட்டுள்ளது" என்றார்.