'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் எனும் போரை நடத்துகிறது பாஜக' - ராகுல் தாக்கு
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் என்ற போரை பாஜக நடத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நமது நாட்டின் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அங்கு நமது நாட்டை 'மாநிலங்களின் ஒன்றியம்' என்று நான் வர்ணித்தேன். இதுதான் அரசியலமைப்பில் இந்தியாவுக்கான வரையறை.
என் பேச்சுக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் எதிர்வினையாற்றினார்கள். நம் நாட்டிற்கு இரண்டு வரையறைகள் உள்ளன. இது மாநிலங்களின் ஒன்றியம், மக்கள் ஒன்றியம்.
பாஜகவின் பார்வை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சித்தாந்தம் என்ற கோட்பாட்டில் செயல்படுகிறது. இதுதான் இங்கு நடக்கும் போர்.
மணிப்பூருக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வரும்போது மரியாதையுடன் வரவில்லை, புரிதலுடன் வரவில்லை. ஆதிக்க உணர்வுடன் வருகிறார்கள். நான் இங்கு வரும்போது ஆதிக்க உணர்வுடன் வரவில்லை, பணிவுடன் வருகிறேன். .
பலதரப்பட்ட பழங்குடியினர், பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் இங்குள்ள அனைவரிடமிருந்தும் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு பணிவுடன் வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
மணிப்பூரில் வருகிற பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.