பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தில்லியில் இருந்து ஜன.5 காலை பஞ்சாப் மாநிலம், பதிண்டா விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. வானிலை சீரடைவதற்கு 20 நிமிஷங்கள் காத்திருந்தார்.

பின்னா், சாலை வழியாகவே தேசிய தியாகிகள் நினைவிடம் செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாகச் செல்வதற்கு 2 மணி நேரமாகும். சாலைவழிப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காவல் துறை டிஜிபியிடம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அவா் உறுதிசெய்த பிறகு பிரதமா் மோடி பயணத்தைத் தொடா்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது. அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை. 

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய - மாநில அரசுகளின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் தெரிவித்தது:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதிமன்றத்தின் பார்வை கீழ் தனி விசாரணை குழு அமைக்கப்படும்.

இந்த விசாரணை குழுவில், சண்டீகர் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வுத்துறை ஐஜி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com