தில்லியில் பொதுப் போக்குவரத்துக்காக மின்சாரப் பேருந்து சேவையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
தில்லியில் காற்று மாசினை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுப் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 300 பேருந்துகளின் பயன்பாட்டினை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
பின்னர் பேசிய அவர், 'இது காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில் முழுவதுமாக மின்சாரத்தால் இயங்கக்கூடியது. முதற்கட்டமாக 300 பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். மொத்தமாக 2,000 பேருந்துகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 கிமீ தொலைவு வரை செல்லும்' என்று தெரிவித்தார்.
மேலும், இந்த பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வசதியாக சிசிடிவி கேமரா, எச்சரிக்கை பட்டன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு 'பிங்க்' நிறத்தில் இருக்கைகள் உள்ளன. ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்களின் பயன்பாடு, அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட காரணங்களால் தில்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.