உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பத்திரிகையாளரை அடித்துக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த காரை முந்திச் சென்றதாக காரில் பயணித்த 3 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சாலையிலேயே சரமாரியாக பத்திரிகையாளரைத் தாக்கியதில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், ‘சஹரன்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் சுதிர் சைனி தங்களை முந்திச் சென்றதாகக்கூறி காரில் பயணித்துக் கொண்டிருந்த 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிருபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.