மகாராஷ்டிரத்தில் சூப்பர் மார்க்கெட், பலசரக்குக் கடைகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மதுபானக் கடைகளில் மட்டுமே ஒயின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 1,000 சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் ஒயின் விற்பனை செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலமாக மாநிலத்தில் ஒயின் விற்பனை 20 முதல் 30% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒயின் விற்பனை செய்யும் கடைகள் ஆண்டுக்கு ரூ. 5,000 தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் இந்த முடிவுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் இதுகுறித்து விளக்கமளிக்கையில், 'ஒயின் என்பது மதுபானம் அல்ல. ஒயின் விற்பனை அதிகரித்தால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கிலே இதைச் செய்துள்ளோம். அரசின் இந்த முடிவை எதிர்க்கும் பாஜக விவசாயிகளுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.