புது தில்லி: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே, கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.
நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி, இதற்கு, இந்திய விமானப் படை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
இந்த சம்பவம், கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சீன போர் விமானம் ஒன்றை ராணுவ வீரர் பார்த்துள்ளார். எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள ரேடாரிலும் அந்த போர் விமானம் சிக்கியது என்று ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
வான்வழி விதிமுறை மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்திய விமானப் படை, நிலையான செயல்பாட்டு விதிமுறைகளின்படி நடவடிக்கையை துரிதப்படுத்தியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இது நடைபெற்ற போது, சீன எல்லைப் பகுதியில், போர் விமானங்கள் மற்றும் விமானப் படை போர்க் கருவிகளைக் கொண்டு மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிடம் ஏராளமான போர் ஜெட் விமானங்களும், ஆளில்லா போர் விமானங்களும் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே நிறுத்தப்பட்டுள்ளன.
போர் விமானம் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே பறந்து சென்றது குறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது கவலைகொள்ள வேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.