குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் குறித்து ஜூலை 17ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதியும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து எந்த கட்சியும் இதுவரை அறிவிப்புகளை வெளியிடவில்லை. பாஜக தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
“மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 17ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளன. அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். அதில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் உறுதி செய்யப்படும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் தேர்வு செய்யும் நபருக்கு ஆதரவளிக்க கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது” என்றார்.