நாடு முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பைக் கண்டறிய 15 ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3,413 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை குரங்கு அம்மை பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு திரும்பிய ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தேவையான பரிசோதனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், குரங்கு அம்மை பாதிப்பைக் கண்டறியும் வகையில் 15 ஆய்வகங்களை பயிற்சி கொடுத்து தயார் செய்துள்ளது.
நாட்டில் குரங்கு அம்மையை கண்டறிய உதவும் வகையில், மாதிரிகளை பரிசோதனை செய்ய 15 ஆய்வகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை தயார் நிலையில் இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.