கொல்கத்தாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பூனைகளால் காற்று மாசு ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் வளர்க்கும் பூனைகளின் முடி, பொடுகு போன்றவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக புகாரளித்துள்ளனர்.
கொல்கத்தாவின் தென்கிழக்கு பகுதியில் 80 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், இரண்டாவது தளத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், அதிக எண்ணிக்கையிலான பூனைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் வளர்க்கும் பூனைகளின் முடிகள், பொடுகுகள் காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக சக குடியிருப்பு வாசிகள் அளித்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு கொல்கத்தாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூனைகள் உலவும் இடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாவது, அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் 40 - 45 பூனைகளை வளர்க்கிறார். இதில், 20 - 25 பூனைகள் அவரது வீட்டிலேயே தங்குகின்றன. 15 - 20 பூனைகள் நடைபாதையில் உறங்குகின்றன. அவற்றின் கழிவுகள் காற்றில் கலந்து அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் பூனைகளின் முடி மற்றும் பொடுகுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் நோய் உண்டாகும் அபாயமும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை குடியிருப்புவாசிகள் அனுகியுள்ளனர். அவர்களது பரிந்துரையின்பேரில் கொல்கத்தா மாநகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.