புது தில்லி: இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தின், 'உத்தரவாதமற்ற, குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது. இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு துன்புறுத்தல்களை நிகழ்த்தி வருவதாக" கவலை தெரிவித்திருந்தது.
"இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஒரு சில நபர்களால் ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அவை எந்த வகையிலும், இந்திய அரசின் கருத்துகள் ஆகாது. ஏற்கனவே, சம்பந்தப்பட்ட அமைப்புகளால் அந்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
"இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு மீண்டும் வகுப்புவாதத்துக்கு ஊக்கமளிக்கும், தவறாக வழிநடத்தும் மற்றும் குறும்புத்தனமான கருத்துகளைத் தெரிவு செய்திருப்பது வருந்தத்தக்கது.
மேலும், வகுப்புவாத அணுகுமுறையைப் பின்பற்றுவதை நிறுத்திக்கொள்ளுமாறும், அனைத்து மத நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இந்தியா குறித்த 'உத்தரவாதமற்ற, குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது. இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளித்து வருவதாக அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுபான்மையினருக்கு எதிராக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கத்தார் மற்றும் குவைத்துக்கு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் ட்வீட்