முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பதவியிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நூபுர் சர்மா கடந்த 2008ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். இவர் தனது பட்டப் படிப்பினை இந்து கல்லூரியில் பயின்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார்.
பின்னர், தனது மேற்படிப்பிற்காக லண்டனுக்கு சென்றார். லண்டனில் படிப்பினை முடித்து இந்தியா திரும்பிய அவர் தில்லியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
37 வயதாகும் நூபுர் சர்மா தில்லியில் வசித்து வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டதன் மூலம் அரசியல் களத்தில் பிரபலமானவர் நூபுர் சர்மா. ஆனால், அரவிந்த் கேஜரிவாலிடம் தோல்வியடைந்த போதிலும் பாஜகவில் அவரது செல்வாக்கு குறையவில்லை.
இதையடுத்து, நூபுர் சர்மாவிடம் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஊடகங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் பாஜகவில் ஊடகத் துறை சார்ந்த மகளிரிடம் நூபுர் உரையாற்றி இருந்தார்.
முகமது நபிகள் குறித்த நூபுரின் சர்ச்சைக் கருத்தினால் அவர் தற்போது கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.