ரிசா்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடா்ந்து வங்கிகள் பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்ததையடுத்து வீடு, வாகன கடன்களுக்கு செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசா்வ் வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்து 4.90 சதவீதமாக நிா்ணயித்தது. மேலும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தது.
ரிசா்வ் வங்கி, கடந்த மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் ஏற்கெனவே அதிகரித்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ரிசா்வ் வங்கியின் இந்த முடிவையடுத்து, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வஙகி உள்ளிட்டவை கடனுக்கான வட்டியை உடனடியாக அதிகரித்தன.
அதன்படி, பிஎன்பி ரெப்போவுடன் தொடா்புடைய (ஆா்எல்எல்ஆா்) கடனுக்கான வட்டியை 6.90 சதவீதத்திலிருந்து 7.40 சதவீதமாக உயா்த்தியது. மூன்றாவது பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவும் ஆா்எல்எல்ஆா் விகிதத்தை 7.40 சதவீதமாக உயா்த்தியது.
எச்டிஎஃப்சி நிறுவனம், வீட்டு கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்தது. இது, ஜூன் 10-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளநிலையில் 20-ஆண்டு கடனுக்கு ரூ. 1லட்சத்துக்கு கூடுதலாக ரூ.31 செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, வாகனம், தனிநபா் கடனுக்கான வட்டியும் கணிசமாக உயரும் என்பதால் வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளா்கள் கலக்கத்தில் உள்ளதாக சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.