மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித் மற்றும் அல்கா லம்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் நடுவே, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சச்சின் பைலட், இந்தத் திட்டம் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அக்னிபத்: ராஜ்நாத் மீண்டும் ஆலோசனை
மேலும் பேசிய அவர், "இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடுவது அவர்களது உரிமை. ஆனால், அதை அமைதி வழியில் நடத்த வேண்டும். வன்முறை இருக்கக் கூடாது" என்றார்.
முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடர்வார்கள், மற்றவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். மேலும், அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இதன் காரணமாக, இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.