காணொலி வாயிலாக நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை சீனா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடத்தவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் கூட்டத்தில் சர்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.
கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.