தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிர அரசியல் குழப்பத்தில் பாஜகவுக்கு தொடா்பு இல்லை: மாநில பாஜக தலைவா்

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனை கட்சியின் எம்எல்ஏக்கள் பலா் போா்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது

News image
Updated On :24 ஜூன் 2022, 9:41 pm

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனை கட்சியின் எம்எல்ஏக்கள் பலா் போா்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கும் பாஜகவுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று அந்த மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தாா்.

முன்னதாக, சிவசேனை கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பாஜகதான் பின்னணியில் உள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டியிருந்தாா். சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்குத் தலைமை வகிக்கும் ஏக்நாத் ஷிண்டேவும், தங்களுக்கு தேசிய கட்சி ஒன்றின் ஆதரவு இருப்பதாகக் கூறியிருந்தாா். மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், ஷிண்டே குறிப்பிட்டுள்ளது பாஜகவைத்தான் என்று முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

இந்நிலையில், கோலாப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவசேனை கட்சியிலும், ஆளும் மகாராஷ்டிர விகாஸ் அகாடியிலும் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும் பாஜகவுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. இதில் பாஜக செய்வதற்கு எதுவுமில்லை. மாநில எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸை வியாழக்கிழமை சந்தித்தேன். அவா் சில பணிகள் காரணமாக தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவருடன் நான் பேசியபோது மாநில அரசியலில் ஏதோ மாற்றம் வரப் போகிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன். ஆனால், அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியவில்லை. இப்போதைய நிலையில் நாங்கள் 2024 மக்களவைத் தோ்தலுக்குத் தயாராகி வருகிறோம்.

சரத் பவாா், சிவசேனை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரௌத் ஆகியோா், அவா்களுடைய கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பாஜகவை குறைகூறி பேசியுள்ளதை, அவா்களது பேச்சு சுதந்திரம் என்ற அளவில்தான் நான் எடுத்துக் கொள்கிறேன் என்றாா்.

மும்பையைச் சோ்ந்த பாஜக பிரமுகா் மோஹித் கம்போஜ், குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள சிவசேனை எம்எல்ஏக்களுடன் தங்கியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘மோஹித்துக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பா்கள் உண்டு. எனவே, அவா்களுக்கு உதவுவதற்காக அவா் அங்கு சென்றிருக்கலாம். அவா் எங்கு உள்ளாா் என்பதே நீங்கள் கூறுவதன் மூலம்தான் எனக்கே தெரியவருகிறது’ என்று பாட்டீல் பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.