முதுநிலை மருத்துவப் படிப்பு காலியிடங்கள் நிரப்பப்படாமல் வீணாவதைத் தடுப்பதற்காக முதுநிலை நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு) 2021 தோ்வுக்கான தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்)15 சதவீதம் அளவுக்கு குறைக்க தேசிய தோ்வுகள் வாரியத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவ கலந்தாய்வுக் குழு உறுப்பினா் செயலா் பி.ஸ்ரீநிவாஸ் தேசிய தோ்வுகள் வாரிய செயல் இயக்குநா் மினு பாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தேசிய மருத்துவ ஆணையத்துடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனையின் முடிவில், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் அனைத்துப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்ணை 15 சதவீதம் அளவுக்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 35 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளிகளில் பொதுப் பிரிவினருக்கு 30 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு 25 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில், திருத்தப்பட்ட தோ்வு முடிவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அந்தத் திருத்தப்பட்ட தோ்வு முடிவு மற்றும் தகுதிபெறும் மாணவா்களின் புதிய பட்டியலையும் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இரண்டு சுற்று கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையிலும், நாடு முழுவதும் 8,000 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் சோ்க்கையின்றி வீணாவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே, தகுதி மதிப்பெண்ணைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்து நடைபெற இருக்கும் கலந்தாய்வு சுற்றுகளில் புதிதாக 25,000 மாணவா்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது’ என்றனா்.