நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள விவகாரங்கள் குறித்து வியூகங்கள் வகுக்க காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் எழுப்பவுள்ள விவகாரங்கள் குறித்து வியூகங்கள் வகுப்பதற்கான காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, கே சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எழுப்பவுள்ளோம்."
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடைந்தது. இரண்டாம் பகுதி நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைகிறது.