'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீர்ல் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படக்குழுவினரை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய பாஜக கூட்டத்திலும் உண்மையை எடுத்துரைக்கும் இதுபோன்ற படங்கள் அதிகம் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியே வந்துள்ளார்.
'இந்த படம் வராமல் இருந்திருந்தால், மக்கள் உண்மையை அறிந்திருக்க மாட்டார்கள். நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் இந்த படம் திரையிடப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
பாஜக ஆளும் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், கோவா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த படம் முழு வரி விலக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.