காங்கிரஸின் ஜி-23 தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், கட்சியின் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. இதில், காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைக் கைப்பற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, 5 மாநில காங்கிரஸ் தலைவர்களையும் ராஜிநாமா செய்ய சோனியா காந்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவா்களின் கூட்டம், தில்லியில் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பா், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆலோசனைக்கு பிறகு வெளியிட்ட கூட்டறிக்கையில், “ அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்து ஜி-23 தலைவர்களின் முக்கிய முடிவுகளை குலாம் நபி ஆசாத் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் பங்கேற்கவுள்ளனர்.