வடகிழக்கு மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க மிசோரம் அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு மேலும் தெரிவித்ததாவது,
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஏப்ரல் 5 முதல் புதிய கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ள நடைமுறைகளை அனைத்துப் பள்ளிகளிலும், விடுதிகளிலும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான கல்லூரிகள் உடனடியாக மீண்டும் திறக்கப்படும். மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கான ஆப்லைன் வகுப்புகள் ஜூலை முதல் தொடங்கும்.
மிசோரம் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை, நறுமண மற்றும் மருத்துவ தாவரங்கள் (HAMP) துறையில் உள்ள பி.எச்டி அறிஞர்கள், வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பகல் மற்றும் மாலை நேரங்களில் திறந்திருக்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது. தேவாலயங்களில் மாநாடுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் நுழையக் கட்டாய பயண அனுமதிச் சீட்டையும் அரசு ரத்து செய்துள்ளது.