சில்வர்லைன் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சரிடம் பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து பினராயி விஜயன் கூறியதாவது:
"நானும் தலைமைச் செயலரும் இன்று பிரதமரைச் சந்தித்தோம். நல்ல உரையாடலாக இருந்தது. ரயில்வே அமைச்சரிடம் பேசி என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு சில்வர்லைன் திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிக்க | பஞ்சாப்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வு
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சில்வர்லைன் திட்டம் செயல்படுத்தப்படாது. நீரோடைகளுக்குத் தேவையான இடங்கள் வழங்கப்படும். நீரியல் ஆய்வின் அடிப்படையில் இது செயல்படுத்தப்படும். இன்னும் ஒரு வருடத்தில் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நிறைவடையும்.
கேரளத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை சேதப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. பொய்ப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் தவறான பாதையில் எதிர்க்கட்சிகள் வழிநடத்துகின்றன. இதற்கென விசித்திரமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.