விலை உயர்வு: மக்களவையில் விவாதத்திற்கு அனுமதி
விலை உயர்வு குறித்து விவாதிக்க இந்த வாரத்தில் நேரம் ஒதுக்க மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து 7வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரத்தில் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, விதி எண் 193-ன் கீழ் இந்த வாரத்தில் விலை உயர்வு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்குவதாக மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை தனியார் பள்ளி வேன் மோதியதில் மாணவர் பலி
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.