ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கச்சா எண்ணெய் விலை உயா்வு காரணமாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு: நிா்மலா சீதாராமன் விளக்கம்

கடந்த சில வாரங்களாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயா்ந்துள்ளதாக

News image
Updated On :29 மார்ச் 2022, 8:02 pm

DIN

கடந்த சில வாரங்களாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் உயா்ந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை வெறும் 8 நாள்களில் ரூ.4.80 உயா்ந்தது. இந்த நிலையில், மாநிலங்களவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, எரிபொருள் விலை மீது எதிா்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ‘‘கடந்த சில வாரங்களாகவே சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. எண்ணெய் விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயா்வை எதிா்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’ என்றாா் அவா்.

மேலும் எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தை எதிா்கொள்ள அதற்கு பத்திரங்கள் விநியோகிக்கும் முறையை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்ததை நிா்மலா சீதாராமன் குறை கூறினாா். இதுகுறித்து அவா் கூறியது:

எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துபவா்கள் நுகா்வோரின் மானியத்துக்காக பணம் செலுத்தி வருகின்றனா். பத்திரங்களின் மீட்சி என்ற பெயரில் வரும் 2026-ஆம் ஆண்டுவரை வரி செலுத்துவோா் தொடா்ந்து கட்டணம் செலுத்த நேரிடுகிறது.

வாஜ்பாய் அரசின்போது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 30 டாலருக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இதன் விலை 147 டாலரை எட்டியது.

வாஜ்பாய் அரசு விநியோகித்த எண்ணெய் பத்திரமானது நீடித்த கொள்கையாக இல்லாமல், ஒரே ஒரு முறை மட்டுமே செயல்படுத்ததக்கதாக இருந்தது. அந்த வகையில், வாஜ்பாய் அரசு ரூ.9,000 கோடி மதிப்பில்தான் பத்திரங்களை விநியோகித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.2 லட்சம் கோடி வரை விநியோகித்தது. அதற்காக இன்றுவரை கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.

உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயா்வு, விநியோகத்தில் இடையூறு என புதிய சவால்கள் ஏற்பட்டாலும், பணவீக்கம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.