தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பெரிய அளவில் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு கோடை வெப்பம் உச்சமடையத் தொடங்கியிருப்பதால், விற்பனையும் சூடுபிடித்திருப்பதாக ஐஸ்க்ரீம் தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோடை வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஐஸ்க்ரீம் கடைகளில் விற்பனை ஜோராக நடக்கிறது. வெப்பத்திலிருந்து சற்று நேரம் நிம்மதி அடைய பெரும்பாலானோர் நாடுவது இந்த ஐஸ்கிரீமைத்தான்.
இந்திய ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் கழகம் தரப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த ஆண்டு ஐஸ்கிரீம் தொழிலில் 15 சதவீதம் அளவிற்கு சரசாரி வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் சில நிறுவனங்கள் 50 சதவீதம் வரை வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!
கரோனா பொதுமுடக்கம், ஐஸ்கிரீம் தொழில்துறையை பெரிய அளவில் புரட்டிப்போட்டுவிட்டது. ஆண்டு தோறும் வழக்கமாக ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை நாடு முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை நடைபெறும். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 - 70 சதவீதம் அளவுக்கு பாதித்துவிட்டது.
இது குறித்து இந்திய ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் கழக தலைவர் சுதிர் ஷா கூறுகையில், கரோனா பேரிடர் காரணமாக சில சின்னச் சின்ன ஐஸ்கிரீம் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக தங்களது தொழிலை நிறுத்திவிட்டன.
இந்த ஆண்டு தேவை அதிகமாக இருக்கும் நிலையில், உற்பத்தியாளர்களால், தேவையை சரியாக கணிக்க முடியாமல், ஐஸ்கிரீம் பற்றாக்குறை கூட நேரிடலாம். இதனை சரியாக கணிக்கும் நிறுவனங்கள் இந்த ஆண்டு 50 சதவீத வளர்ச்சியைக் காணலாம்.
மிகத் துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இந்த ஆண்டு மட்டும் ஐஸ்கிரீம் விற்பனை ரூ.25,000 கோடி அளவுக்கு நடைபெறும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.