காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இன்றைய விசாரணையின்போது, "தேச துரோக சட்டத்திற்கு எதிரான மனுக்களை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து ஆராயப்படும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் மனுதாரர்கள் பதிலளிக்க சனிக்கிழமை காலைவரையிலும், மத்திய அரசு அதற்கான பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய திங்கள்கிழமை காலை வரையிலும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 10ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேச துரோக சட்டப்பிரிவுக்கு எதிராக இந்தியா பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா என ஐந்து பேர் சார்பாக தனித்தனியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியபோது அதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டேவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா பத்திரிகை ஆசிரியர் சங்கம், தேச துரோக சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
அதில், "இந்த முதல் தகவல் அறிக்கை, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பல்வேறு காலங்களில் தேச துரோக சட்டங்களை அரசு தவறாக பயன்படுத்திவந்துள்ளது.
தங்களது கடமைகளை நிலைநாட்டுவதால் பல்வேறு மாநிலங்களில் தனிப்பட்ட நபர்கள் பதிவு செய்யும் தகவல் அறிக்கையின் காரணமாக ஊடகத்திற்கு எதிராக அரசு பழிவாங்கு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனவே, கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகத்தின் சுதந்திரத்தை காக்க மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடி வந்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.