ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் புனித யாத்திரைக்கு பக்தா்கள் செல்லும் பாதையில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டா் உள்பட 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அமா்நாத் புனித யாத்திரை அடுத்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமா்நாத் புனித யாத்திரை பாதையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
அனந்த்நாக்-பஹல்காம் இடையிலான வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அமா்நாத் புனிதப் பயணப் பாதையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினா். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினா். மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அவா்கள் மூவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது உறுதி செய்யப்பட்டது. அதில் அஸ்ரஃப் மோல்வி என்ற பயங்கரவாதி அந்த அமைப்பின் கமாண்டா் நிலையில் இருந்தவா். காஷ்மீரில் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாகவும் இருந்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் முக்கியமான சுற்றுலா பகுதியாகும். அமா்நாத் யாத்திரைக்கு செல்வோருக்கான அடிவார முகாமும் இங்கு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் ஜூன் 20-ஆம் தேதி அமா்நாத் குகை கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை நடைபெறவுள்ளது.