இந்திய குடிமக்கள் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் இரண்டையுமே சமமாக மதிக்க வேண்டும் என மத்திய அரசு தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவரும் தேசிய கீதத்தினை மதிப்பது போல் தேசியப் பாடல் வந்தே மாதரத்தையும் சமமாக மதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து, இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் என இரண்டுமே முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன. இந்திய குடிமக்கள் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் என இரண்டையுமே சமமாக மதிக்க வேண்டும். ஆனால், அதனை ஒருபோதும் ரிட் மனுவின் கீழ் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்துள்ளது.
தேசிய கீதம் போன்றே தேசியப் பாடல் வந்தே மாதரமும் தனித்துவமான இடத்தினைப் பிடித்துள்ளது. இந்தியர்களின் உணர்வுகளில் வந்தே மாதரம் கலந்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் பாடப்படும்போது அதனை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால், வந்தே மாதரம் பாடல் விஷயத்தில் இது போன்ற சட்டங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.