முதல் முறையாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் ஹோடி படகுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அல்லது விளைவிக்கப்படும் தனித்தன்மை வாய்ந்த பொருள்களுக்கு, அதன் தரம், இடத்தின் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் புவிசார் குறியீடு(ஐி.ஐ) வழங்கி வருகிறது.
முதன்முறையாக 2004 ஆம் ஆண்டு டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டி, திருப்பதி லட்டு, திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மதுரை மல்லி, ஊத்துக்குளி வெண்ணெய், உடன்குடி கருப்பட்டி, பவானி ஜமக்காளம், மார்த்தாண்டம் தேன், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், பத்தமடை பாய், நீலகிரி தேநீர், பாரம்பரியம் மிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகம், தஞ்சாவூர் வீணை, நரசிங்கம்பேட்டை நாகசுரம் என நுற்றுக்கணக்கான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 43 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரை சார்ந்த 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க | நாகாலாந்து: சிறைக் கதவை உடைத்து 9 கைதிகள் தப்பியோட்டம்
இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தயாரிக்கப்படும் ஹோடி படகுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய முறைப்படி பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுதான் ஹோடி படகு. இந்த படகுகள் உள்ளூரில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை 60 முதல் 80 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கக்கூடியவை. நிக்கோபார் தீவுகளில் மீன்பிடித் தொழில், மக்கள் போக்குவரத்து, சரக்குகளை கொண்டு செல்வதற்கு பெருமளவு ஹோடி படகுகளே பயன்படுத்தப்படுகிறது.
அந்தமானில் உருவான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.