ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை முழுவதுமாக நிறைவு செய்யும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் மோதல் கிளம்பியது. ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதால் அவரது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய கோரிக்கை எழுந்தது.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு வந்த சிவிங்கிப் புலி: நல்ல செய்தி காத்திருக்கிறதா?
அதேசமயம் துணை முதல்வர் சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களின் தலையீட்டால் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முழுவதுமாக பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
சனிக்கிழமை இதுதொடர்பாக பேசிய அவர், “மாநில அரசை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது. எங்களது ஆட்சி தொடர்வதை தடுக்க கடுமையான முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. முன்னதாக எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்த பாஜகவின் முயற்சியை எங்களது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து தவிடுபொடியாக்கினர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | நடிகர் சங்கத்திலிருந்து கே.பாக்யராஜ் நீக்கம் ஏன்?
தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும், நட்டாவும் தலைவராவது யாருக்கும் தெரியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். காங்கிரஸ் கட்சி நாட்டின் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளதை இந்தத் தேர்தல் மூலம் நாட்டு மக்களுக்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.” என அசோக் கெலாட் தெரிவித்தார்.