சமாஜவாதி கட்சி நிறுவனா் முலாயம் சிங் யாதவின் (82) உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிா் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் அகிலேஷ் யாதவை தொடா்புகொண்டு முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனா்.
முலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியிலிருந்து தில்லி குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருடைய உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். சிறப்பு மருத்துவக் குழுவும் அவருக்கு சிகிச்சையளித்து வருகிறது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடா்ந்து மோசமான நிலையில்தான் உள்ளது. உயிா் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா், மருத்துவமனைக்கு வந்து முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடமும், மருத்துவா்களிடமும் கேட்டறிந்தாா். அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முலாயம் சிங் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டாா் என்று கூற முடியவில்லை. இருநாள்களுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகக் கூற முடியும்’ என்றாா்.