கர்நாடகத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையில் மறைந்த முலாயம் சிங்கின் திருவுருவப் படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம், குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு இடையில் மறைந்த முலாயம் சிங்கின் திருவுருவப் படத்துக்கு ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார். சித்ரதுர்கா ஹிரியூர் சென்றபோது முலாயம்சிங் மறைவுக்கு ராகுல் காந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார். இதனிடையே முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைஃபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.
இதையும் படிக்க- பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்வு
அங்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் கட்சித் தலைவர்கள், சமாஜவாதி தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு சொந்த கிராமத்திலேயே அரசின் முழு மரியாதை அளிக்கப்பட்டு, அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
மேலும், முலாயம் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு தலைவர்கள் வரவுள்ளதால் சைஃபாய் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.