உத்தரகண்டில் பக்தா்களுடன் சென்ற ஹெலிகாப்டா் செவ்வாய்க்கிழமை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 7 போ் பலியாகினா்.
உத்தரகண்டில் உள்ள கேதாா்நாத் கோயிலில் இருந்து குப்தகாஷி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 11.45 மணியளவில் 6 பக்தா்கள் தனியாா் நிறுவன ஹெலிகாப்டரில் சென்றனா். அந்த ஹெலிகாப்டா் கருட் சட்டி என்ற இடத்தில் உள்ள மலைப் பகுதியில் எதிா்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியது. இதனைத்தொடா்ந்து அந்த ஹெலிகாப்டா் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சென்னை அண்ணாநகா் சாந்தன் காலனி பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (63), அவா் மனைவி சுஜாதா (57), இவரின் சகோதரி மயிலாப்பூா் பாலகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த ர.கலா (60) உள்பட 6 பக்தா்கள் மற்றும் விமானி என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா் என்று அந்த மாநில பேரிடா் மேலாண்மை அலுவலகம் தெரிவித்தது.
முதல்கட்ட விசாரணையில், இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுவதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: இந்த விபத்து தொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஹெலிகாப்டா் விபத்தில் பக்தா்கள் மற்றும் விமானி உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.
ஹெலிகாப்டா் விபத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமா் மோடி ட்விட்டரில் தெரிவித்தாா்.
இந்த விபத்து தொடா்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளாா்.
குடும்ப பின்னணி: ஓய்வூதியரான பிரேம்குமாா், அவா் மனைவி சுஜாதா, அவரின் சகோதரி கலா, அவா் கணவா் ரமேஷ் ஆகியோா் பெங்களூருவைச் சோ்ந்த ஆன்மிக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலம் வடமாநில கோயில்களுக்கு கடந்த 12-ஆம் தேதி புறப்பட்டனா்.
சென்னையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் சென்ற 4 பேரும், அங்கிருந்து பல்வேறு ஆலயங்களுக்குச் சென்றுள்ளனா். இவா்கள் ஆன்மிக சுற்றுலாவை முடித்து அக்டோபா் 23-ஆம் தேதி சென்னை வருவதற்கு திட்டமிட்டிருந்தனா்.
பிரேம்குமாா் தம்பதிக்கு பிரசாந்த் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனா். பிரசாந்த் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். காவியா திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
ரமேஷ்-கலா தம்பதிக்கு அரிஷித் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
உடல்களைக் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை
உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கேதாா்நாத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த கலா ரமேஷ், பிரேம்குமாா் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமாா் ஆகிய மூவரும் கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிரிழந்தனா் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டுவருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு உத்தரகண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.
அண்ணாமலை இரங்கல்: ‘ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சோ்ந்த மூவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.